Skip to main content

என் துயரத்தின் முடிவில்.. ஒரு கதவு காத்திருந்தது.. அதன் பெயர் மரணம்!


"என் துயரத்தின் முடிவில்

ஒரு கதவு காத்திருந்தது

அதன் பெயர் மரணம்"

அவர்தான் லூயிஸ் கிளக்.. ஆம்.. மரணத்தையும் கூட அழகாக வர்ணித்தவர் லூயிஸ்.. அமெரிக்காவைச் சேர்ந்த லூயிஸ் க்ளூக், இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றவர்.

77 வயதாகும் லூயிஸ், நியூயார்க்கைச் சேர்ந்தவர்.. அவர் தொடாத தலைப்பே இல்லை என்று சொல்லும் அளவுக்கு கவிதைகளில் ஊறித் திளைத்தவர். அவரது கவிதைகளை ரசிக்க மட்டுமில்லை.. அறிவுப்பூர்வமாகவும் நுகர முடியும்.. அதுதான் லூயிஸ் டச்!

தனிமை, குடும்ப உறவுகள், விவாகரத்து, ஏன் மரணத்தையும் கூட தனது கவிதைகளால் அலங்கரித்துள்ளார் லூயிஸ். இவரது கவிதைகளில் ரோம் மற்றும் கிரேக்க கலாச்சாரங்களின் சாயல்களும் மெல்ல இழையோடியபடி காணப்படும்.

ஆரம்ப காலத்தில் அவரது கவிதைகளில் நிறைய காதல் தோல்வி குறித்துதான் இருந்தன. குடும்ப உறவுகளில் ஏற்பட்ட சீர்குலைவுகள், மனம் உடைந்து போய் குமுறிய நாட்கள், வாழ்வதற்கான வழிகளே புலப்படாமல் சிரமப்பட்டது என்று தன்னை மையப்படுத்தியே நிறைய கவிதைகளை வடித்து வந்தார் லூயிஸ்.. ஆனால் பின்னாட்களில் அவரது கவிதைகளின் பயணம் பாதை மாறியது.. ஆனாலும் கூட அதிலும் துயரங்களே மிகையாக தெறித்து விழுந்தன.

"எனக்கு நினைவிருக்கிறது

தலைக்கு மேலே சத்தம்.. பைன் மரத்தின் கிளைகள் முறிந்து விழுந்தன..

பிறகு ஒன்றுமில்லை..

பலவீனமான சூரியன்

வறண்டு கிடக்கும் நிலப்பரப்பை மேலும் வறளச் செய்தபடி!

அவரது ஒவ்வொரு படைப்பும் ஒரு விதமான தாக்கத்தின் பின்விளைவே.. அவரது ஒவ்வொரு கவிதையும் ஏதாவது தாக்கத்தை நமக்கும் உணர்த்திச் செல்லத் தவறாது.. அப்படித்தான் அவற்றை லூயிஸ் படைத்திருப்பார்.. Meadowlands.. இது அவரது படைப்புகளில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியது.. ஒரு ஆதி கால பூமியுலாவாசிக்கும், அவனது மனைவி மெடோலேன்ட்ஸுக்கும் இடையிலான காதல், அதன் பின்னர் நடந்த திருமணம்.. அந்த உறவில் ஏற்படும் உணர்வுப் பிரளயங்கள்.. என்று படிப்படியாக கொண்டு போயிருப்பார் லூயில். ரொம்பப் பிரமாதமான படைப்பு இது.

விடா நோவா என்ற நூலை ஒரே மூச்சில், தான் எழுதி முடித்ததாக கூறியுள்ளார் லூயிஸ். பல விருதுகளைப் பெற்றுக் குவித்த நூல் இது. இதைப் படிக்கும்போதே இதை நான் எந்த வேகத்தில் எழுதியிருப்பேன் என்பதைப் புரிந்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார் லூயிஸ். 1999ல் வெளியான படைப்பு இது.

"வாழ்வது ரொம்ப கடினம்

இருண்ட பூமியில்

மனசாட்சியைப் புதைத்து விட்டு..!"

2009ல் வெளியான "ஏ வில்லேஜ் லைஃப்" ரொம்ப வித்தியாசமானது. ஒரு கவிதாயினியாக அறியப்பட்ட லூயிஸுக்குள் இருந்த நாவலிஸ்ட் மற்றும் சிறுகதையாளரின் தாக்கத்தை கலந்தெடுத்து பிறந்த படைப்பு இது. ஒரு கிராமத்து வாழ்க்கையை ரொம்ப அற்புதமாக இதில் விவரித்திருப்பார் லூயிஸ். அதில் அவரது வாழ்க்கையும் கூட கலந்து இழையோடியிருக்கும். இதில் கிராமத்து வாழ்க்கையை, அதன் அழகை, அதன் அவலத்தை என எல்லா உணர்வுகளையும் உள்ளது உள்ளபடி சொல்லியிருப்பார் லூயிஸ். குறிப்பாக இத்தாலியில் அழிந்து கொண்டிருக்கும் விவசாய வாழ்க்கையை அதன் துயரத்தை, தடுமாற்றத்தை அப்படி அழகுற விவரித்திருப்பார்.. படிக்கும்போதே மனதை பிசையும்.

"என் வாழ்க்கையின் மையப் பகுதியிலிருந்து

ஒரு ஊற்று பிறப்பெடுத்தது..

நீல நிறத்தில்...

கடல் மேல் கலந்து அமிழ்ந்து..."

சமகால பெண் கவிஞர்களில் லூயிஸுக்கு தனி இடம் உண்டு. இருளையும் கூட வெளிச்சம் போட்டு அழகுபடுத்திக் காட்டியவர் லூயிஸ்.. அவர் எழுதியவை என்று சொல்ல முடியாது... மாறாக ஒவ்வொரு கவிதையையும், படைப்பையும் பிரசவித்து சுமந்து வெளிக் கொண்டு வந்தவர் லூயிஸ்.. இலக்கியத்திற்கான நோபல் பரிசை லூயிஸ் தாமதமாகத்தான் வென்றார்.. ஆனால் அவரது ரசிகர்களோ அவரது படைப்புகளை பாராட்டி கொண்டாடி மகிழ தாமதம் செய்ததே இல்லை.

கவிதை வரிகள்: The Wild Iris

(ஒன்இந்தியா தமிழ் இணையதளத்தில் வெளியான கட்டுரையின் மீள் பதிவு)

Comments

Popular posts from this blog

எல்லாவற்றுக்கும் தயாராக இருங்கள்.. நெருக்கடி வந்தால்.. மனம் உடைந்து போகாதீர்கள்!

காலையிலேயே வந்த ஒரு மரணச் செய்தி சோர்வைக் கொடுத்து விட்டது. என்னுடன் பணியாற்றிய, எனது சிஷ்யை தீபாவின் திடீர் மரணம் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 45 வயதில் இயற்கை எய்தியிருக்கிறார். 2 பிள்ளைகள்.. அப்பாவும் இல்லை, இதோ அம்மாவும் கிளம்பி விட்டார்.. வருத்தமாக இருக்கிறது. இங்கு எதுவுமே நிரந்தரம் இல்லை. எதற்குமே உத்தரவாதம் இல்லை. எல்லாற்றுக்கும் தயாராக இருக்க வேண்டும். செட்டில் ஆகி விட்டோம்.. நமக்கு எல்லாம் இருக்கிறது என்று எப்போதுமே மனதை ரிலாக்ஸ் ஆக்கி விடாதீர்கள்.. எது வேண்டுமானாலும் நடக்கலாம்.. எப்படி வேண்டுமானாலும் மாறலாம். மாற்றத்தை எப்போதுமே எதிர்பார்த்து இருங்கள். எது நடந்தாலும் தைரியத்தை மட்டும் இழக்காதீர்கள்.. பணம், பொருள், பதவி, உறவுகள் என எது போனாலும் கவலைப்படாதீர்கள்.. நெருக்கடியான நேரத்தில் தளர்ந்து போகாமல், நிதானமாக, பொறுமையாக இருக்க முயற்சியுங்கள். அதுதான் நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேலை. எதுவுமே முடிவு அல்ல.. எதற்குமே யாருமே முற்றுப்புள்ளி வைக்க முடியாது. ஒவ்வொரு புள்ளியையும் கமா-வாக மாற்றிக் கொண்டு நகர முயற்சியுங்கள். நமக்கான வாய்ப்புகள் நிச்சயம் எங்காவது இருக்கும். நாம்...

ஆண்கள் தினம் கொண்டாடும் நிலையிலா இருக்கிறோம்?

சர்வதேச ஆண்கள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. உண்மையில் அந்த தினத்தைக் கொண்டாடும் தகுதி ஆண்களுக்கு இருக்கிறதா.. அத்தகைய சூழலை நாம் உருவாக்கி வைத்திருக்கிறோமா...! சமீப காலமாக அதிகரித்து வரும் பாலியல் பலாத்கார நிகழ்வுகள் அதிர வைக்கின்றன. வயது வித்தியாசம் இல்லாமல் எங்கெங்கும் அதிகரித்துக் கிடக்கும் பாலியல் வன்கொடும் செயல்களைப் பார்க்கும்போது பெண்களை ஆண் சமுதாயம் இன்னும் காமப் பார்வையில்தானே பார்த்துக் கொண்டிருக்கிறது என்று வருந்தத்தான் தோன்றுகிறது. இந்த சூழ்நிலையில் தன்னைப் பிறர் கொண்டாடும் நிலையில் ஆண்கள் சமுதாயம் வைத்துள்ளதாக நான் கருதவில்லை. இதுகுறித்து எனது கருத்து.. இது எனது கருத்து மட்டுமே.. வீடியோவில் பகிர்ந்துள்ளேன். கேட்டு விட்டு சொல்லுங்கள். https://www.youtube.com/watch?v=Q3oaJOs6G_I #InternationalMensDay2021 #ஆண்கள்தினம்