காலையிலேயே வந்த ஒரு மரணச் செய்தி சோர்வைக் கொடுத்து விட்டது. என்னுடன் பணியாற்றிய, எனது சிஷ்யை தீபாவின் திடீர் மரணம் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 45 வயதில் இயற்கை எய்தியிருக்கிறார். 2 பிள்ளைகள்.. அப்பாவும் இல்லை, இதோ அம்மாவும் கிளம்பி விட்டார்.. வருத்தமாக இருக்கிறது.
இங்கு எதுவுமே நிரந்தரம் இல்லை. எதற்குமே உத்தரவாதம் இல்லை. எல்லாற்றுக்கும் தயாராக இருக்க வேண்டும். செட்டில் ஆகி விட்டோம்.. நமக்கு எல்லாம் இருக்கிறது என்று எப்போதுமே மனதை ரிலாக்ஸ் ஆக்கி விடாதீர்கள்.. எது வேண்டுமானாலும் நடக்கலாம்.. எப்படி வேண்டுமானாலும் மாறலாம். மாற்றத்தை எப்போதுமே எதிர்பார்த்து இருங்கள். எது நடந்தாலும் தைரியத்தை மட்டும் இழக்காதீர்கள்.. பணம், பொருள், பதவி, உறவுகள் என எது போனாலும் கவலைப்படாதீர்கள்.. நெருக்கடியான நேரத்தில் தளர்ந்து போகாமல், நிதானமாக, பொறுமையாக இருக்க முயற்சியுங்கள். அதுதான் நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேலை. எதுவுமே முடிவு அல்ல.. எதற்குமே யாருமே முற்றுப்புள்ளி வைக்க முடியாது. ஒவ்வொரு புள்ளியையும் கமா-வாக மாற்றிக் கொண்டு நகர முயற்சியுங்கள்.
நமக்கான வாய்ப்புகள் நிச்சயம் எங்காவது இருக்கும். நாம் தைரியமாகவும், மனோ திடத்துடனும் அதைத் தேட வேண்டும். எந்த வழியும் இல்லையே என்று வருந்தாமல், நம்பிக்கையுடன் தேடினால் உங்களுக்கான வழி நிச்சயம் கிடைக்கும். நமக்கு இருக்க வேண்டியது மன தைரியம் மட்டுமே. மன தைரியத்துடனும், நம்பிக்கையுடனும் இருந்தால்தான் நம் மேல் அமர்ந்திருக்கும் அழுத்தம் நமது உடல் நலனைப் பாதிக்காது. உங்களுக்குள் இருக்கும் அழுத்தத்தை வெளியில் கொட்டி விடுங்கள். தேங்கி நிற்காமல் நாலு பேரிடம் பேசுங்கள், இயல்பாக வைத்திருக்க முயற்சியுங்கள். உங்களை இலகுவாக்கிங்க... முடியாவிட்டாலும் கூட, செய்துதான் ஆக வேண்டும்.. வேறு வழியில்லை. எல்லாவற்றையும் உள்ளுக்குள் வைத்து அழுது புலம்பி அழுத்தத்தை அதிகரிப்பதால் சோகத்தைத்தான் சந்திக்க நேரிடும்.
வாழ்க்கையை நம்பிக்கையுடனும், சரியான முயற்சிகளுடனும் Face பண்ணுங்க.. உடைஞ்சு போய்ராதீங்க.. அசாத்தியமான நம்பிக்கை இருக்கும் வரை, நம்மை உடைக்க இந்த உலகத்தில் எவராலும் முடியாது.. நம்மை விட மோசமான நிலையில் இருப்பவர்கள் எத்தனை பேர் உள்ளனர். அவர்களது நிலையை யோசித்துப் பாருங்க.. அவர்களே நம்பிக்கையுடன் போராடும் போது நாம் மட்டும் உடைந்து போய் விடலாமா என்ன..!
போராட்டம் முக்கியம்.. அதேசமயம், ஹெல்த்தும் முக்கியம்.. அதில் கோட்டை விட்டு விடாதீர்கள்.. உங்களை நம்பியுள்ள அன்புக்குரியவர்களுக்கு அது பெரும் வேதனையைக் கொடுத்து விடும். கவனமா இருங்க.. கவலைப்படாமல் இருங்க!
Comments