Skip to main content

விநோதய சித்தம்.. மறக்காமல் பாருங்க!

எனக்கு அதுக்கெல்லாம் நேரம் இல்லை.. வேலை கிடக்கு தலைக்கு மேல.. காலில் வெந்நீர் ஊற்றிக் கொள்ளாத குறையாக ஓடிக் கொண்டிருப்போரை இழுத்துப் பிடித்து தலையில் லேசாக ஒரு கொட்டு வைத்திருக்கிறது.. விநோதய சித்தம்... தமிழ்ப் படம்.

ஒரு அருமையான Feel Good படம்.. வழக்கமாக கருத்துக்களைப் பிழிந்து பிழிந்து ஜூஸ் போட்டுக் கொடுக்கும் சமுத்திரக்கனியை இதில் வேற லெவலில் பார்க்கலாம். படத்தை இயக்கியிருப்பவரும் அவரே.

கொஞ்சம் கேரக்டர்கள்தான். அதை வைத்து மிகப் பெரிய கருத்தை மக்களுக்குப் "பாஸ்" செய்துள்ளார் சமுத்திரக்கனி.

தம்பி ராமையாதான் கதையின் நாயகன்.. என்னால்தான் எல்லாம் நடக்கிறது.. நான் இல்லாவிட்டால் ரொம்பக் கஷ்டம்.. எனக்கு நேரமே இல்லை... என்று எப்போதும் சதா வேலையிலேயே கருத்தாக இருக்கும் நபர்தான் நம்ம தம்பி சார். அவரது மனைவியாக ஸ்ரீரஞ்சினி. இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள்.

ஒரு நாள் தம்பி ராமையா கோவை போய் விட்டு சென்னை திரும்பும் வழியில் மரணத்தைத் தழுவுகிறார். அதன் பிறகு நடப்பதுதான் படத்தின் கதை.. வித்தியாசமான சப்ஜெக்ட்தான். அதை பிரசன்ட் செய்த விதம்.. சபாஷ் போட வைக்கிறது. 

சமுத்திரக்கனி கேரக்டர் இந்தப் படத்தில் அதிகம் பேசவில்லை.. அதுவே ஒரு பெரிய ஆச்சரியம்தான். பக்கம் பக்கமாக வசனம் பேசாமல், காட்சிகளையும், காட்சிக்கான சூழலையும் வைத்து ரசிகர்களைப் பேச வைத்திருக்கிறார் சமுத்திரக்கனி. படம் முழுக்க "ரிச்"சாக எடுத்திருக்கிறார்கள்.. அதேசமயம், மக்களுக்கு எது "ரீச்" ஆக வேண்டுமோ அதையும் கரெக்டாக செய்து முடித்துள்ளார் சமுத்திரக்கனி.

தம்பி ராமையாவின் கேரக்டர் மூலம் மக்களுக்கு அருமையான செய்தியை கொண்டு சென்றுள்ளனர். எல்லாம் உங்களால்தான் என்று தலையில் பாரத்தை ஏற்றி வைத்துக் கொள்ளாதீர்கள். எது நடக்க வேண்டுமோ அது நடக்கும்.. அது நீங்கள் இருந்தாலும் நடக்கும், இல்லாவிட்டாலும் நடக்கும். உங்களைச் சுற்றிலும் உள்ளவர்களையும் பாருங்கள். அவர்களுக்காகவும் நேரம் ஒதுக்குங்கள்.. என்ற கருத்தை சொல்லிச் சென்றிருக்கிறது இந்தப் படம்.

குழப்பமில்லாத திரைக்கதை, முகம் சுளிக்க வைக்காத காட்சிகள், சிம்பிளான வசனங்கள், எளிமையான கதைச் சூழல்.. பாடல் கிடையாது.. படம் முழுக்க அருமையாக இருக்கிறது.. படத்தின் கடைசியில் வரும் வசனம் கை தட்ட வைக்கிறது.

வழக்கமாக தமிழில் இதுபோன்ற படங்களை எடுப்போர் குறைவு.. அதை விட எடுத்ததை பார்க்க வைக்கும் வகையில் படைப்போர் அதை விட குறைவு.. எனவே இந்தப் படத்தை ரசிகர்கள் நிச்சயம் ஆதரிக்க வேண்டும். அப்போதுதான் தமிழிலும் இதுபோன்ற சிந்தனையைத் தூண்டு விக்கும் வகையிலான படங்கள் அதிகம் வரும். 

ஜீ 5 ஓடிடி தளத்தில் படம் இருக்கிறது.. பார்க்க வேண்டிய படம்.

Comments

Popular posts from this blog

எல்லாவற்றுக்கும் தயாராக இருங்கள்.. நெருக்கடி வந்தால்.. மனம் உடைந்து போகாதீர்கள்!

காலையிலேயே வந்த ஒரு மரணச் செய்தி சோர்வைக் கொடுத்து விட்டது. என்னுடன் பணியாற்றிய, எனது சிஷ்யை தீபாவின் திடீர் மரணம் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 45 வயதில் இயற்கை எய்தியிருக்கிறார். 2 பிள்ளைகள்.. அப்பாவும் இல்லை, இதோ அம்மாவும் கிளம்பி விட்டார்.. வருத்தமாக இருக்கிறது. இங்கு எதுவுமே நிரந்தரம் இல்லை. எதற்குமே உத்தரவாதம் இல்லை. எல்லாற்றுக்கும் தயாராக இருக்க வேண்டும். செட்டில் ஆகி விட்டோம்.. நமக்கு எல்லாம் இருக்கிறது என்று எப்போதுமே மனதை ரிலாக்ஸ் ஆக்கி விடாதீர்கள்.. எது வேண்டுமானாலும் நடக்கலாம்.. எப்படி வேண்டுமானாலும் மாறலாம். மாற்றத்தை எப்போதுமே எதிர்பார்த்து இருங்கள். எது நடந்தாலும் தைரியத்தை மட்டும் இழக்காதீர்கள்.. பணம், பொருள், பதவி, உறவுகள் என எது போனாலும் கவலைப்படாதீர்கள்.. நெருக்கடியான நேரத்தில் தளர்ந்து போகாமல், நிதானமாக, பொறுமையாக இருக்க முயற்சியுங்கள். அதுதான் நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேலை. எதுவுமே முடிவு அல்ல.. எதற்குமே யாருமே முற்றுப்புள்ளி வைக்க முடியாது. ஒவ்வொரு புள்ளியையும் கமா-வாக மாற்றிக் கொண்டு நகர முயற்சியுங்கள். நமக்கான வாய்ப்புகள் நிச்சயம் எங்காவது இருக்கும். நாம்...

ஆண்கள் தினம் கொண்டாடும் நிலையிலா இருக்கிறோம்?

சர்வதேச ஆண்கள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. உண்மையில் அந்த தினத்தைக் கொண்டாடும் தகுதி ஆண்களுக்கு இருக்கிறதா.. அத்தகைய சூழலை நாம் உருவாக்கி வைத்திருக்கிறோமா...! சமீப காலமாக அதிகரித்து வரும் பாலியல் பலாத்கார நிகழ்வுகள் அதிர வைக்கின்றன. வயது வித்தியாசம் இல்லாமல் எங்கெங்கும் அதிகரித்துக் கிடக்கும் பாலியல் வன்கொடும் செயல்களைப் பார்க்கும்போது பெண்களை ஆண் சமுதாயம் இன்னும் காமப் பார்வையில்தானே பார்த்துக் கொண்டிருக்கிறது என்று வருந்தத்தான் தோன்றுகிறது. இந்த சூழ்நிலையில் தன்னைப் பிறர் கொண்டாடும் நிலையில் ஆண்கள் சமுதாயம் வைத்துள்ளதாக நான் கருதவில்லை. இதுகுறித்து எனது கருத்து.. இது எனது கருத்து மட்டுமே.. வீடியோவில் பகிர்ந்துள்ளேன். கேட்டு விட்டு சொல்லுங்கள். https://www.youtube.com/watch?v=Q3oaJOs6G_I #InternationalMensDay2021 #ஆண்கள்தினம்