Skip to main content

ஓர்மைகளின் பாரம் சுமந்து..!



எத்தனை கனவுகள்

என்னென்ன நினைவுகள்

மாடியில் ஓடியாடி

உன் மடியில் படுத்துறங்கி

செல்லச் சண்டைகள் போட்டு

படபடவென பட்டாம் பூச்சியாய்

ஒவ்வொரு அறைக்குள்ளும் புகுந்து புறப்பட்டு

மழைக்காலங்களில் காகிதக் கப்பல் விட்டு

மொத்தக் குடும்பமாய் மொட்டை மாடியில் படுத்துறங்கி

வான் நோக்கி விழி பார்க்க கதை பேசி..


ஜன்னலோரம் வந்தமர்ந்த குருவிகள் எத்தனை எத்தனை

பெல்லடித்தபடி ரோட்டில் சென்ற சைக்கிள்கள்

பார்த்துச் சிரித்த பல நாட்கள்

காற்றடித்த காலத்தில் படபடத்த கதவு ஜன்னல்கள்

பத்திரமாய் பாய்ந்தோடி சாத்தி வைத்த பொழுதுகள்..


தூரத்தில் தெரிந்த அப்பாவின் தலை பார்த்து

கதவு திறந்து ஓடிச் சென்று 

கையில் பிடித்து வரும் பையை பிடுங்கி

அப்பையில் பொதிந்து கிடக்கும் அன்பைப் பகிர்ந்து..


உன் மடியில் சாய்ந்த போதெல்லாம்

அரவணைத்து ஆறுதல் தந்து 

சிந்திய கண்ணீரையும்

கிளர்ந்து முகிழ்த்த புன்னகைகளையும்

சுகமான பாரமாய் தாங்கி நின்ற சுவர்கள்..


ஓர்மைகளின் பாரம் சுமந்து

நீ வீழ்ந்த அந்தத் தருணம்

மழை நீரில் கலந்து கரைந்தது எங்கள் ஓலங்கள்

உன்னைப் பார்த்துப் பார்த்துக் கட்டிய..

அம்மையும் அச்சனும்

விவரிக்க முடியா விசனத்துடன்..!


நீரில் நீ விழவில்லை

எங்கள் உள்ளத்தில் விழுந்து புதைந்தாய்...!


பல வெள்ளங்களைப் பார்த்த உன் கால்கள்

இந்த ஓர் மழைக்கு உள்ளிழுத்துக் கொண்ட சோகம்

போய் வா மனையே.. 

உன் சுகமான நினைவுகளோடு

எங்கள் மனதோடு வாழ்வாய்!

Comments

Popular posts from this blog

எல்லாவற்றுக்கும் தயாராக இருங்கள்.. நெருக்கடி வந்தால்.. மனம் உடைந்து போகாதீர்கள்!

காலையிலேயே வந்த ஒரு மரணச் செய்தி சோர்வைக் கொடுத்து விட்டது. என்னுடன் பணியாற்றிய, எனது சிஷ்யை தீபாவின் திடீர் மரணம் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 45 வயதில் இயற்கை எய்தியிருக்கிறார். 2 பிள்ளைகள்.. அப்பாவும் இல்லை, இதோ அம்மாவும் கிளம்பி விட்டார்.. வருத்தமாக இருக்கிறது. இங்கு எதுவுமே நிரந்தரம் இல்லை. எதற்குமே உத்தரவாதம் இல்லை. எல்லாற்றுக்கும் தயாராக இருக்க வேண்டும். செட்டில் ஆகி விட்டோம்.. நமக்கு எல்லாம் இருக்கிறது என்று எப்போதுமே மனதை ரிலாக்ஸ் ஆக்கி விடாதீர்கள்.. எது வேண்டுமானாலும் நடக்கலாம்.. எப்படி வேண்டுமானாலும் மாறலாம். மாற்றத்தை எப்போதுமே எதிர்பார்த்து இருங்கள். எது நடந்தாலும் தைரியத்தை மட்டும் இழக்காதீர்கள்.. பணம், பொருள், பதவி, உறவுகள் என எது போனாலும் கவலைப்படாதீர்கள்.. நெருக்கடியான நேரத்தில் தளர்ந்து போகாமல், நிதானமாக, பொறுமையாக இருக்க முயற்சியுங்கள். அதுதான் நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேலை. எதுவுமே முடிவு அல்ல.. எதற்குமே யாருமே முற்றுப்புள்ளி வைக்க முடியாது. ஒவ்வொரு புள்ளியையும் கமா-வாக மாற்றிக் கொண்டு நகர முயற்சியுங்கள். நமக்கான வாய்ப்புகள் நிச்சயம் எங்காவது இருக்கும். நாம்...

ஆண்கள் தினம் கொண்டாடும் நிலையிலா இருக்கிறோம்?

சர்வதேச ஆண்கள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. உண்மையில் அந்த தினத்தைக் கொண்டாடும் தகுதி ஆண்களுக்கு இருக்கிறதா.. அத்தகைய சூழலை நாம் உருவாக்கி வைத்திருக்கிறோமா...! சமீப காலமாக அதிகரித்து வரும் பாலியல் பலாத்கார நிகழ்வுகள் அதிர வைக்கின்றன. வயது வித்தியாசம் இல்லாமல் எங்கெங்கும் அதிகரித்துக் கிடக்கும் பாலியல் வன்கொடும் செயல்களைப் பார்க்கும்போது பெண்களை ஆண் சமுதாயம் இன்னும் காமப் பார்வையில்தானே பார்த்துக் கொண்டிருக்கிறது என்று வருந்தத்தான் தோன்றுகிறது. இந்த சூழ்நிலையில் தன்னைப் பிறர் கொண்டாடும் நிலையில் ஆண்கள் சமுதாயம் வைத்துள்ளதாக நான் கருதவில்லை. இதுகுறித்து எனது கருத்து.. இது எனது கருத்து மட்டுமே.. வீடியோவில் பகிர்ந்துள்ளேன். கேட்டு விட்டு சொல்லுங்கள். https://www.youtube.com/watch?v=Q3oaJOs6G_I #InternationalMensDay2021 #ஆண்கள்தினம்