Skip to main content

"எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் பாத்துக்குவாங்க".. சசிகலா ஏன் அப்படிச் சொன்னார்?

எம்ஜிஆரும், ஜெயலலிதாவும்தான் இனி கழகத்தைக் காப்பாற்ற வேண்டும் .. காப்பாற்றுவார்கள் என நம்புகிறேன் என்று சசிகலா கூறியிருப்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. தன்னால் இனி கட்சியை மீட்க முடியாது என்பதை மறைமுகமாக அவர் சுட்டிக்  காட்டியுள்ளாரா என்ற அர்த்தத்திலும் இதைப் பார்க்க வேண்டியுள்ளது.

மறைந்து போய் விட்ட இந்த தலைவர்கள் கழகத்தைக் காப்பாற்றுவார்கள் என்று சசிகலா ஏன் கூற வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.

பெங்களூர் சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு அதிகமுவைக் கைப்பற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்டவர் சசிகலா. ஆனால் சிறையிலிருந்து வந்த முதல் நாள் ஏற்படுத்திய பரபரப்போடு அப்படியே அமைதியாகி விட்டார். திடீரென ஒரு நாள் அரசியலுக்கு முழுக்குப் போடுவதாகவும் கூறி விட்டு கப்சிப்பென்று ஆகி விட்டார். 

பின்னர் தேர்தல் சமயத்தில் கட்சிக்காரர்களுடன் போனில் பேசினார். அந்த ஆடியோக்கள் வெளியாகி புதிய பரபரப்பைக் கிளப்பின. ஆனால் அதிமுகவை அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. இந்த நிலையில் இன்று ஜெயலலிதா சமாதிக்கு வந்து போயுள்ளார். சிறையிலிருந்து வந்த பிறகு முதல் முறையாக இன்றுதான் ஜெயலலிதா சமாதிக்கு வந்தார் சசிகலா. சிறைக்குப் போவதற்கு முன்பு வந்து விட்டு போன பிறகு இன்றுதான் முதல் முறையாக சமாதிக்கு வந்தார் சசிகலா.

சரி சமாதிக்கு வந்துள்ளதால் ஏதாவது பரபரப்பாக பேசலாம் அல்லது ஏதாவது செய்யலாம் என்ற எதிர்பார்ப்பில் அமமுக கட்சியினரும் பெரும் திரளாக வந்திருந்தனர். ஆனால் அவரோ செய்தியாளர்களிடம் பேசுகையில், எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் பார்த்துக் கொள்வார்கள் என்று கூறி விட்டுப் போனது சப்பென்று ஆகி விட்டது. அதிமுகவை மீட்க என்னால் இயலவில்லை, இனி எம்ஜிஆர், ஜெயலலிதாவால் ஏதாவது மாஜிக் நடந்தால்தான் உண்டு என்று மறைமுகமாக சொல்லியுள்ளாரா சசிகலா என்ற சந்தேகமும் எழுகிறது.

சசிகலாவைப் பொறுத்தவரை சிறைக்குப் போவதற்கு முன்பு இருந்த ஆவேசமும், வேகமும் அவர் வெளியே வந்த பிறகு இல்லை, அது போய் விட்டது. இப்போது அவர் வெறும் சசிகலாவாக மட்டுமே இருக்கிறார். அவர் எதிர்பார்த்த எந்த பலமும் அவருக்கு வந்து சேரவில்லை. பெரிய தலைவர்கள் யாருமே அவருக்காக பகிரங்கமாக குரல் கொடுத்து அதிமுகவிலிருந்து வெளியே வரவில்லை. இப்படிப்பட்ட நிலையில் தன்னால் மட்டுமே எதுவும் செய்ய முடியாது என்ற எதார்த்தத்தை சசிகலா உணர்ந்துள்ளபடியால்தான் இவ்வாறு பொதுவாக பேசி விட்டுப் போயுள்ளதாக கருதப்படுகிறது.

எப்படி இருந்தாலும் மாறிப் போய் விட்ட அரசியல் சூழலில், அதிமுகவுக்கு மக்கள் மத்தியில் மிகப் பெரிய அதிருப்தி நிலவி வரும் நிலையில், ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக பெரும் தோல்வியைச் சந்தித்துள்ள நிலையில், சசிகலாவால் கட்சியைக் கைப்பற்றினாலும் கூட எந்த வகையிலும் சோபிக்க முடியாது என்றே கருதப்படுகிறது. எனவே சசிகலா இப்போதைக்கு அதிமுகவைக் கைப்பற்றும் எந்த நடவடிக்கையிலும் தீவிரம் காட்டுவாரா என்பது சந்தேகமே.. பொறுத்திருந்து பார்க்கலாம்.

Comments

Popular posts from this blog

எல்லாவற்றுக்கும் தயாராக இருங்கள்.. நெருக்கடி வந்தால்.. மனம் உடைந்து போகாதீர்கள்!

காலையிலேயே வந்த ஒரு மரணச் செய்தி சோர்வைக் கொடுத்து விட்டது. என்னுடன் பணியாற்றிய, எனது சிஷ்யை தீபாவின் திடீர் மரணம் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 45 வயதில் இயற்கை எய்தியிருக்கிறார். 2 பிள்ளைகள்.. அப்பாவும் இல்லை, இதோ அம்மாவும் கிளம்பி விட்டார்.. வருத்தமாக இருக்கிறது. இங்கு எதுவுமே நிரந்தரம் இல்லை. எதற்குமே உத்தரவாதம் இல்லை. எல்லாற்றுக்கும் தயாராக இருக்க வேண்டும். செட்டில் ஆகி விட்டோம்.. நமக்கு எல்லாம் இருக்கிறது என்று எப்போதுமே மனதை ரிலாக்ஸ் ஆக்கி விடாதீர்கள்.. எது வேண்டுமானாலும் நடக்கலாம்.. எப்படி வேண்டுமானாலும் மாறலாம். மாற்றத்தை எப்போதுமே எதிர்பார்த்து இருங்கள். எது நடந்தாலும் தைரியத்தை மட்டும் இழக்காதீர்கள்.. பணம், பொருள், பதவி, உறவுகள் என எது போனாலும் கவலைப்படாதீர்கள்.. நெருக்கடியான நேரத்தில் தளர்ந்து போகாமல், நிதானமாக, பொறுமையாக இருக்க முயற்சியுங்கள். அதுதான் நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேலை. எதுவுமே முடிவு அல்ல.. எதற்குமே யாருமே முற்றுப்புள்ளி வைக்க முடியாது. ஒவ்வொரு புள்ளியையும் கமா-வாக மாற்றிக் கொண்டு நகர முயற்சியுங்கள். நமக்கான வாய்ப்புகள் நிச்சயம் எங்காவது இருக்கும். நாம்...

ஆண்கள் தினம் கொண்டாடும் நிலையிலா இருக்கிறோம்?

சர்வதேச ஆண்கள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. உண்மையில் அந்த தினத்தைக் கொண்டாடும் தகுதி ஆண்களுக்கு இருக்கிறதா.. அத்தகைய சூழலை நாம் உருவாக்கி வைத்திருக்கிறோமா...! சமீப காலமாக அதிகரித்து வரும் பாலியல் பலாத்கார நிகழ்வுகள் அதிர வைக்கின்றன. வயது வித்தியாசம் இல்லாமல் எங்கெங்கும் அதிகரித்துக் கிடக்கும் பாலியல் வன்கொடும் செயல்களைப் பார்க்கும்போது பெண்களை ஆண் சமுதாயம் இன்னும் காமப் பார்வையில்தானே பார்த்துக் கொண்டிருக்கிறது என்று வருந்தத்தான் தோன்றுகிறது. இந்த சூழ்நிலையில் தன்னைப் பிறர் கொண்டாடும் நிலையில் ஆண்கள் சமுதாயம் வைத்துள்ளதாக நான் கருதவில்லை. இதுகுறித்து எனது கருத்து.. இது எனது கருத்து மட்டுமே.. வீடியோவில் பகிர்ந்துள்ளேன். கேட்டு விட்டு சொல்லுங்கள். https://www.youtube.com/watch?v=Q3oaJOs6G_I #InternationalMensDay2021 #ஆண்கள்தினம்