Skip to main content

"நல்லா ரெஸ்ட் எடுங்க.. அப்பா"... உலாப் போகும் உணர்வுகள் (2)


இருக்கு.. இந்த ஆஸ்பத்திரியில் நமக்கு வித்தியாசமான அனுபவம் இருக்கு என்று மனதுக்குள் ஒரு அசரீரி ஓட.. மெல்லிய சிந்தனையுடன் தனது பேகை எடுத்து கட்டில் மீது மீது வைத்து அதைத் திறந்து துணிகளை புரட்டி லுங்கியை உருவி அதைக் கட்டிக் கொண்டான் ஆதவன். 

செல்போனை எடுத்து வீட்டுக்கு போன் செய்து, நான் வந்துட்டேம்மா.. எல்லாம் நல்லாருக்கு. நல்ல ரூம் மேட் கிடைச்சிருக்கார் என்று கூறி விட்டு போனை கீழே வைத்தான். 

அறைக்கு வெளியே என்ன நிலவரம் என்று பார்ப்பதற்காக மெல்ல வெளியேறி வந்தான். நீண்டு கிடந்த காரிடாரில் ஒரு விதமான அமைதி. அறைகள் எல்லாம் கதவு பூட்டப்பட்டுக் கிடந்தன. ஆனால் உள்ளுக்குள் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. ஆட்கள் இருக்கிறார்கள், அமைதியாக.

ஆதவனின் அறைக்கு இடதுபுறத்தில் ஒரு அறை. அதில் அப்பா, மகள் இருப்பது தெரிந்தது. அதற்கு எதிர்புற வரிசை மூலை அறையில் ஒரு வயதான கணவன், மனைவி. கணவர் தண்ணீர் பிடிப்பதற்காக பிளாஸ்க்குடன் வந்து கொண்டிருந்தார். அவரைப் பார்த்து ஆதவன் புன்னகைத்தான். பதிலுக்கு அவரிடமிருந்தும் ஒரு சின்னப் புன்னகை.

"நல்லாருக்கீங்களா. இப்ப பரவாயில்லையா"

"நல்லாருக்கேன் சார்.. புது அட்மிஷனா.."

"ஆமாங்க.."

"நல்லா ரெஸ்ட் எடுங்க"

"தேங்ஸ்ங்க"

தனது அறையின் எதிரில் இருந்த அறையைப் பார்த்தான் ஆதவன். அது பாதி திறந்து கிடந்தது. உள்ளே இரு மூதாட்டிகள். ஒருவர் யாருடனோ செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். "டாக்டர் வந்து பார்த்தா.. நல்லாயிட்டேன்னு சொன்னா. 2 நாள்ல அனுப்பிடுவாளாம்.. நான் இப்பதான் சாப்பிட்டேன். நர்ஸ் வந்து மருந்து கொடுத்துட்டுப் போயிருக்கா. ஒரு பிரச்சினையும் இல்லை. சரி சரி படுத்து தூங்கறேன்.. இல்லை இல்லை.. ரொம்ப நேரம் முழிச்சிருக்கலை.. தூங்கிடுவேன்"

அவருக்கு அருகில் இருந்த கட்டில் காலியாக கிடந்தது. மூலையில் கிடந்த இன்னொரு கட்டிலில் இன்னொரு பாட்டி படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தார். இரு பாட்டிகளுக்கும் குறைந்தது 80 வயதாவது இருக்கும். ஒருவர் ஆக்டிவாக காணப்பட்ட நிலையில் இன்னொருவர் அமைதியாக தூங்கிக் கொண்டிருந்தார். இருவரையும் பார்த்து பெருமூச்செறிந்தான் ஆதவன்.

ஆதவன் இருந்த அறைக்கு வலது புறத்தில் யாரும் இல்லை. அறை காலியாக கிடந்தது. விளக்குகள் அனைத்தும் எரிந்தபடியும், ஃபேன் ஓடியபடியும் இருந்தது. அதற்கு எதிர்புற அறை காலியாக கிடந்தது. அந்த அறைக்கு பக்கத்து அறையும் காலி.

அந்த அமைதியான காரிடாரில் சின்னதாக ஒரு வாக் போய் விட்டு மீண்டும் அறைக்குத் திரும்பினான் ஆதவன்.

"உங்க சொந்த ஊர் எது சார்".. ரவிச்சந்திரன் பேச்சைத் தொடர்ந்தார்.

"மதுரை சார்.. சென்னைக்கு வந்து செட்டிலாகி கிட்டத்தட்ட 30 வருஷம் ஆகப் போகுது."

" ஓ அப்படியா.. எனக்கு கும்பகோணம்.. ஆனால் அப்பா அரசுப் பணியில் இருந்ததால் பல ஊர்களுக்குப் போயிருக்கேன், படிச்சிருக்கேன். மதுரையில் பள்ளிப் படிப்பு படிச்சிருக்கேன். திண்டுக்கல்லில் படிச்சிருக்கேன். திருச்சி, சென்னை.. பல ஊர்களில் வாசம். நீங்க என்ன பண்றீங்க?"

"நான் ஜர்னலிஸ்ட் சார்"

"ஓ சூப்பர்.. நான் நியூஸ் ரீடர்.. இப்ப இல்லை..  ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி ஆல் இந்திய ரேடியோ, சன் டிவி நிறைய சானல்களில் நியூஸ் வாசிச்சிருக்கேன்"

சுவாரஸ்யமாக தொடர்ந்தது அந்த உரையாடல். அப்போது ஒரு நர்ஸ் வந்தார்.

"இங்க ஆதவன் யாரு?"

"நான்தாம்மா"

"அப்பா.. இந்த டேப்ளட்ஸ் சாப்பிடணும்.. காலைல மட்டும் சாப்பிட்டா போதும். வேற மருந்து எதுவும் இல்லை இப்போதைக்கு. நிறைய தண்ணி குடிங்க. நல்லா ரெஸ்ட் எடுங்க. வேற ஏதாவது கம்ப்ளெயின்ட் இருந்தா சொல்லுங்க"

பெற்ற மகளைப் போல வந்து பாசத்துடன் பேசி மருந்துகளைக் கொடுத்து விட்டுச் சென்ற  அந்த பெண்ணுக்கு தேங்ஸ் சொல்லிவிட்டு மருந்துகளை ஓரமாக வைத்து விட்டு மெல்லப் படுத்தான் ஆதவன்.. தூக்கம் வரவில்லை. ஆனாலும் கண்களை மூடிக் கொண்டான்.. மனதுக்குள் என்னென்னவோ ஓடின.. இலக்குகள் இல்லாத ஓட்டம் போல.. பாகவதர் காலத்து சினிமாக்களில் அடுத்தடுத்து வரும் பாடல்களைப் போல.. சிந்தனைகள் மெகா சீரியல் போல ஓடிக் கொண்டே இருந்தன. அப்படியே மெல்லத் தூக்கம் வரை, ஒருக்களித்துப் படுத்துக் கொண்ட ஆதவன்.. அப்படியே தூங்கிப் போனான்.

ஒரு மணி நேரம் ஓடியிருக்கும்.. திடீரென ஒரு சத்தம்...

" சூப் .. ஜூஸ்.. சூப்.. ஜூஸ்"

யார்ரா  என்று எழுந்து பார்த்தால் ஒரு தள்ளு வண்டியில் இரண்டு சின்ன டிரம்களுடன் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.

ரவிச்சந்திரனைத் திரும்பிப் பார்த்தான் ஆதவன்.

"இப்படித்தான் வரிசையா வரும். இப்ப சூப்பும், ஜூஸும் வந்திருக்கு.. வாங்க போய் வாங்கலாம்"

"ஓ.. ஓகே ஓகே."

இரண்டு டம்பளர்களை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தான் ஆதவன்.

ஒரு டம்பளரில் சூப் ஊற்றினார் அந்த சேவகர். இன்னொரு டம்பளரில் ஜூஸ்.

காய்கறி சூப் போல.. நல்லாத்தான் இருந்துச்சு. ஆரஞ்சு ஜூஸ். கொஞ்சம் புளிப்புடன் இருந்தது. இரண்டையும் சற்று இடை வெளி விட்டு குடித்தான் ஆதவன். செல்போனை எடுத்து மணியைப் பார்த்தான் ஆதவன்.. 5.40 என்று காட்டியது. 

"அடுத்து என்ன வண்டி வரும் சார்"

"இனி டின்னர்தான்.. 7, 7.30 மணிக்கு வரும்.. அதுவரைக்கும் நமக்கு ரெஸ்ட் கொஞ்சம் படுத்துத் தூங்கலாம்" சிரித்தபடி கூறினார் ரவிச்சந்திரன்.

பதிலுக்கு சிரிப்பை சிந்திய  ஆதவன் மீண்டும் காரிடார் பக்கம் நடந்தான். இடது மூலையில் இருந்த ஜன்னல் அவனை அழைத்தது. மெல்ல நடையை அதை நோக்கி வீசினான். ஜன்னலுக்குப் போய் வெளியில் எட்டிப் பார்த்தான். நேற்று வரை அலட்சியமாக பார்த்த வெளியுலகம் இப்போது அச்சம் தருவதாக இருந்தது. எத்தனை எத்தனை அபாயங்களை தன்னுள் புதைத்துக் கொண்டுள்ளது இந்த உலகம்.. இத்தனைக்கும் மத்தியில்  ஓடிக் கொண்டிருக்கிறது ஒவ்வொரு வாழ்க்கையும்.. துரோகங்கள், வன்மங்கள், சதிகள், சந்தோஷங்கள், துக்கங்கள், வேதனைகள், மகிழ்ச்சிகள், நட்பு, காதல், குடும்பம்.. எதற்காக வாழ்கிறோம்.. என்ன இலக்கை நோக்கி நமது பாதைகள்  போகின்றன.. இந்த குறுகிய வாழ்க்கையில்தான் எத்தனை விஷமங்கள்.. நாம் நல்லா இருக்கணும்.. நாம் மட்டும் நல்லா இருந்தா போதும்.. நம்மைச் சுற்றி என்ன நடந்தாலும் கவலை இல்லை.. பெரும்பான்மையானோரின் எண்ணம் இப்படித்தானே இருக்கிறது.. சுயநலங்களின் மொத்த ரூபமாகத்தான் பலரும் இருக்கிறோம்... எத்தனை விசித்திரமானது இந்த வாழ்க்கை.. எண்ணங்கள் தீப்பொறியாய் கிளர்ந்து எரிய.. நீண்ட பெருமூச்சை விட்டெறிந்தான் ஆதவன்.

(தொடரும்)


3வது பகுதி

Comments

Popular posts from this blog

எல்லாவற்றுக்கும் தயாராக இருங்கள்.. நெருக்கடி வந்தால்.. மனம் உடைந்து போகாதீர்கள்!

காலையிலேயே வந்த ஒரு மரணச் செய்தி சோர்வைக் கொடுத்து விட்டது. என்னுடன் பணியாற்றிய, எனது சிஷ்யை தீபாவின் திடீர் மரணம் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 45 வயதில் இயற்கை எய்தியிருக்கிறார். 2 பிள்ளைகள்.. அப்பாவும் இல்லை, இதோ அம்மாவும் கிளம்பி விட்டார்.. வருத்தமாக இருக்கிறது. இங்கு எதுவுமே நிரந்தரம் இல்லை. எதற்குமே உத்தரவாதம் இல்லை. எல்லாற்றுக்கும் தயாராக இருக்க வேண்டும். செட்டில் ஆகி விட்டோம்.. நமக்கு எல்லாம் இருக்கிறது என்று எப்போதுமே மனதை ரிலாக்ஸ் ஆக்கி விடாதீர்கள்.. எது வேண்டுமானாலும் நடக்கலாம்.. எப்படி வேண்டுமானாலும் மாறலாம். மாற்றத்தை எப்போதுமே எதிர்பார்த்து இருங்கள். எது நடந்தாலும் தைரியத்தை மட்டும் இழக்காதீர்கள்.. பணம், பொருள், பதவி, உறவுகள் என எது போனாலும் கவலைப்படாதீர்கள்.. நெருக்கடியான நேரத்தில் தளர்ந்து போகாமல், நிதானமாக, பொறுமையாக இருக்க முயற்சியுங்கள். அதுதான் நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேலை. எதுவுமே முடிவு அல்ல.. எதற்குமே யாருமே முற்றுப்புள்ளி வைக்க முடியாது. ஒவ்வொரு புள்ளியையும் கமா-வாக மாற்றிக் கொண்டு நகர முயற்சியுங்கள். நமக்கான வாய்ப்புகள் நிச்சயம் எங்காவது இருக்கும். நாம்...

ஆண்கள் தினம் கொண்டாடும் நிலையிலா இருக்கிறோம்?

சர்வதேச ஆண்கள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. உண்மையில் அந்த தினத்தைக் கொண்டாடும் தகுதி ஆண்களுக்கு இருக்கிறதா.. அத்தகைய சூழலை நாம் உருவாக்கி வைத்திருக்கிறோமா...! சமீப காலமாக அதிகரித்து வரும் பாலியல் பலாத்கார நிகழ்வுகள் அதிர வைக்கின்றன. வயது வித்தியாசம் இல்லாமல் எங்கெங்கும் அதிகரித்துக் கிடக்கும் பாலியல் வன்கொடும் செயல்களைப் பார்க்கும்போது பெண்களை ஆண் சமுதாயம் இன்னும் காமப் பார்வையில்தானே பார்த்துக் கொண்டிருக்கிறது என்று வருந்தத்தான் தோன்றுகிறது. இந்த சூழ்நிலையில் தன்னைப் பிறர் கொண்டாடும் நிலையில் ஆண்கள் சமுதாயம் வைத்துள்ளதாக நான் கருதவில்லை. இதுகுறித்து எனது கருத்து.. இது எனது கருத்து மட்டுமே.. வீடியோவில் பகிர்ந்துள்ளேன். கேட்டு விட்டு சொல்லுங்கள். https://www.youtube.com/watch?v=Q3oaJOs6G_I #InternationalMensDay2021 #ஆண்கள்தினம்